Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Wednesday 10 November, 2010

காமக் கொடூரனை போட்டுத் தள்ளிய காவல்துறை

இத... இத... இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம்!
நவம்பர் 9 அன்று தீபாவளி கொண்டாடிய கோவை மக்கள்!

கோவை சம்பவத்தைப் பற்றி பதிவை போட்டு மூன்று நாள்கள் கூட ஆகவில்லை. கோவை காவல்துறையினர் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

பொது மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம். இதுபோல் பள்ளி மாணவர்கள் செல்ல பேருந்து தேவை என்பதையும் கூறி இருந்தோம் அதுவும் உடனே நிறைவேற்றப்பட்டது. ஒருவேளை கருணாநிதி அவர்கள் நமது பிளாக் ஸ்பாட்டை பார்த்து விட்டாரோ என்னவோ?


கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் முஸ்கான், ரித்திக் கொல்லப்பட்டது பெற்றோர்களிடையே பிள்ளைகளின் நலன் குறித்து கவலையை உண்டு பண்ணியது.

அந்த ஊர் மக்கள் யாரும் இந்த வருடம் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட முடியாமல் இந்த கொடூர சம்பவத்தின் மூலம் சொல்லென்னாத் துயரத்தில் ஆழ்ந்தனர். சிறுவர் சிறுமியைக் கடத்திய வேன் டிரைவர் மோகன் ராஜ் அந்த 10 வயதுச் சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட செய்தி அனைவரின் மனதிலும் மோகன் ராஜ் மீது வெறியையே தூண்டியது.


அவனை அரபு நாட்டில் கொல்வதைப்போல் நடுத் தெருவில் வைத்து நாயைக் கல்லால் அடிப்பதுபோல் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் என்கவுண்டர் செய்து கொல்ல வேண்டும் என்றும் பொது மக்கள் பேசிக் கொண்டனர்.

இவன்தான் குற்றம் புரிந்தான் என்பதை அனைவரும் அறிந்த பிறகு எதற்காக கோர்ட், கேஸ், விசாரணை என்று நேரத்தையும், மக்களின் வரிப் பணத்தையும் செலவழிக்க வேண்டும். நேராக என்கவுண்டர்தான் என்ற மனநிலைக்கு கோவை போலீஸார் வந்து விட்டனர். ஏனென்றால் அந்தக் காமக் கொடூரன் செய்த செயல் அப்படி. இவன் செய்த செயலால் அவனை விசாரித்த காவல்துறையினர் கூட இரண்டு நாட்களாக மிகுந்த மன உளைச்ச-ல் இருந்துள்ளனர்.

இப்படி அனைவரின் மனதிலும் வெறுப்பை உண்டாக்கிய அந்த வேன் டிரைவர் மோகன் ராஜ் மற்றும் அவரது நண்பர் மனோகர் ஆகியோர் எப்படி கொலை செய்தார்கள் என்பதை அறிய அவர்கள் இருவரையும் இருவேறு வேன்கள் மூலம் கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் கொண்டு சென்றுள்ளனர். முதல் வேனில் மோகன் ராஜும் அதற்குப் பின்னால் மற்றொரு வேனில் மனோகரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

ரயில்வே லெவல் கிராசிங் நெடுநேரமாக திறக்காமல் இருந்ததால் மாற்றுப் பாதையில் செல்ல திட்டமிட்டனர். மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது வேனிலிருந்து தப்ப முயன்ற மோகன் ராஜ் காவல்துறை அதிகாரி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான். இதில் இரண்டு காவல்துறையினருக்கு குண்டடி பட்டுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட மற்றொரு காவலர் துப்பாக்கியை எடுத்து என்கவுண்டர் செய்துள்ளார்.

(இந்த என்கவுண்டர் சம்பவம் எப்படி நடந்தது என்று இங்கே பல்வேறு கேள்விகள் எழலாம். அது நமக்குத் தேவையில்லை. ஏனென்றால் குற்றம் புரிந்தவனுக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்தது ஒரு போலி என்கவுண்டராகக் கூட இருக்கலாம். ஆனால் இதை மக்கள் வரவேற்கின்றனர். ஏனென்றால் அந்தக் காமக் கொடூரன் மோகன் ராஜ் செய்த செயல் அப்படி.)

இதை நாம் பார்க்கும்போது இஸ்லாமியத் தீர்ப்புதான் சரி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரபு நாடுகளில் ஒருவன் குற்றம் புரிந்தால் அதாவது ஒரு பெண்ணைக் கற்பழித்தால் அவனின் ஆணுறுப்பை நடுத் தெருவில் வைத்து துண்டித்து விடுவார்கள். இப்படிப்பட்ட தண்டனைகளால்தான் அங்கே குற்றம் நடப்பது மிக மிகக் குறைவு.

ஒருவன் மற்றொருவனால் பாதிக்கப்பட்டால் அதாவது மற்றொருவனுடைய பல்லை உடைத்தாலும், கண்ணைக் குருடாக்கினாலும், கையை உடைத்தாலும், காலை முறித்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு என்ன நேர்ந்ததோ அதேபோல் பாதிப்பை உண்டாக்கியனுக்கு தண்டனை வழங்கப்படும்.

குற்றம் புரிந்தவர்களை பிடித்து அவர்கள் செய்த குற்றம் உறுதியானதும் உடனே தண்டனையை வழங்க வேண்டும். இவன்தான் குற்றம் புரிந்தான் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த பிறகு உடனே தண்டனையை வழங்கினால்தான் மற்றவருக்கும் குற்றம் செய்ய எண்ணம் தோன்றாது. விசாரணைக் கைதிகளை நன்கு விசாரித்து அவர் குற்றம் புரிந்திருந்தால் மட்டுமே தண்டனை வழங்க வேண்டும்.

முஸ்கான் மற்றும் ரித்திக் ஆகியோரை இழந்த பெற்றோருக்கு நேர்ந்த கதி எந்த ஒரு பெற்றோருக்கும் ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன். குழந்தையை இழந்த பெற்றோருக்குத்தான் அதன் வேதனை தெரியும். அந்தக் குழந்தையை இழந்து அவர்கள் பட்ட துன்பத்தினை இங்கே நாம் விவரிக்க முடியாது. நமக்கு அதுபோல் ஏற்படாமல் இருக்க இறைவன்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.

இந்த என்கவுண்டர் சம்பவத்தை கேள்விப்பட்டதும் கோவை மக்கள் நவம்பர் 5ம் தேதி கொண்டாட வேண்டிய தீபாவளியை 9ம் தேதி கொண்டாடி இருக்கின்றனர். கோவை மக்கள் மோகன் ராஜ் மீது எந்தளவுக்கு வெறுப்பிருந்தால் அவனுடைய சாவில் தீபாவளி கொண்டாடி இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த இடத்தில் நாம் மனித நேயத்தையும், மனித உரிமையையும் பேசிக் கொண்டிருப்பது வீண் வேலை. இது சரியான தண்டனைதான் என்பது கருணை உள்ளம் கொண்ட அனைவருக்கும் நன்கு தெரியும்.

மேலும் பல செய்திகளை இங்கே உள்ள படங்களின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

0 comments: