Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Friday 12 November, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 9

எந்த ஒரு கொள்கையைப் பிரதானமாக ஒருவர் பிரச்சாரம் செய்கிறாரோ அந்தக் கொள்கையை அவர் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும். அக்கொள்கை அனைவராலும் கடைப்பிடிக்க முடியாததாக இருந்தாலும் அக்கொள்கையை ஆதரிப்பவர்களால் மட்டுமாவது அது பின்பற்றப்பட வேண்டும். உலகில் எவராலும் கடைப்பிடிக்கப் பட முடியாத எந்தக் கொள்கையும் பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க முடியாது.

பகுத்தறிவுத் தந்தை என்று போலி பகுத்தறிவுவாதிகளால் அழைக்கப்படும் பெரியார் முழங்கி, போலி பகுத்தறிவுவாளர்கள் பெருமையுடன் வெளியிட்டு வரும் இந்தக் கொள்கையைப் பாருங்கள்!

''எனவே பெற்றோர்களே! பெண்களைப் பெண் என்று அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போல் கட்டுவித்தல் வேண்டும்'' (வாழ்க்கைத் துணை நலம் நூலிலிருந்து... 1958ஆம் ஆண்டு பதிப்பு)

பெண்களைப் பெண்கள் என்று அழைப்பதுதான் பகுத்தறிவு; அறிவியல் முடிவு. பெண்ணையும் ஆணையும் பகுத்தறிவின் துணை கொண்டு ஆய்வு செய்தாலும், உடற்கூறு அடிப்படையில் ஆய்வு செய்தாலும் மற்றும் அறிவியலின் எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் இரண்டும் தனித்தனி என்பது நிரூபணமாகும்.

நிதர்சனமான உண்மைக்கு எதிரான இந்தக் கருத்து பகுத்தறிவுக்கு எந்த வகையில் ஏற்றது என்பதைப் போலி பகுத்தறிவாளர்கள் விளக்கத் தயாரா?

இது அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் எதிரானது என்றால் இதைக் கூறியவர் பகுத்தறிவுக்கே தந்தை என்று வாதிடுவதில் உள்ள பகுத்தறிவு என்ன?

ஒரு மனிதனின் மேல் குருட்டு பக்தி வைத்து அவர் அறிவியலுக்கு எதிரான கருத்தைப் பேசினாலும் அதையும் பகுத்தறிவு என்று வாதிடும் இவர்களுக்கும், முன்னோர்கள் எழுதி வைத்த கட்டுக் கதைகளை நம்புபவர்களுக்கும் இடையில் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை.

மேலும் தந்தை பெரியார் கூறியபடி அவரது பிள்ளைகள்(?) யாரும் பெண் களை ஆண் என்று சொல்லி வளர்ப்பதில்லை. ஆண்களின் பெயரை இடுவதும் இல்லை. ஏற்கனவே இடப்பட்ட பெண் பெயர்களை ஆண் பெயர்களாக மாற்றுவதும் இல்லை.

பெரியார்கூட தனது முதல் மனைவியின் 'நாகம்மாள்' என்ற பெயரை மாற்றா விட்டாலும் தனது கொள்கையை ஏற்றுக் கொண்ட மணியம்மையின் பெயரை மணியப்பன் என்றோ மணிவண்ணன் என்றோ ஆண் பெயராக மாற்றவில்லை.

வீரமணி வகையறாக்கள் தமது குடும்பப் பெண்களுக்கு எழில் அரசி, தமிழரசி  என்பதுபோல்தான் பெயர்களைச் சூட்டுகிறார்கள். பெண்ணுக்கு எழிலரசன் என்றோ தமிழரசன் என்றோ பெயர் சூட்டுவதில்லை.

மதவாதிகளைவிட போலி பகுத்தறிவாளர்கள் அதிக மூட நம்பிக்கை யுள்ளவர்களாக இருப்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பகுத்தறிவுத் தந்தையின் மற்றொரு கொள்கை முழக்கத்தைப் பாருங்கள்.
''பெண் இல்லாமலும் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம். ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என் பதை ருசுப்படுத்திக் கொள்ள முடியாத வர்களாயிருக்கிறார்கள்.

ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல் லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுற்றவர்களாயிருக் கிறார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்களுக்கு ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகி விடுகிறது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும்''.
(குடியரசு 12, 8, 2, 3, 10:3)

பெண்கள் பிள்ளை பெறக் கூடாது என்பது பெரியாரின் பகுத்தறிவுச் சிதறல்களில் ஒன்று.

பெண்கள் திருமணம் செய்யாவிட்டாலும், கர்ப்பமடைந்து குழந்தைகள் பெறாவிட்டாலும் உடல் ரீதியாக அவர்களுக்குப் பலவிதமான கோளாறுகள் ஏற்படும். பல விதமான புற்று நோய்கள் ஏற்படவும் இது காரணமாக அமையும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்த உண்மையை மனிதன் கண்டு பிடித்து விட்டான்.

இந்த அறிவியல் உண்மைக்கு எதிராக, பெண்களுக்குப் பெருங்கேடு விளை விக்கும் இக்கருத்தைப் பகுத்தறிவு சார்ந்தது என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

மேலும் பெண்கள் பிள்ளை பெறாவிட்டால் நாம் வாழும் காலத்தோடு மனித குலம் அழிந்து போய்விடும். ஒட்டு மொத்த மனித குலத்தையும் அழிக்கும் இந்த ஆபத்தான சிந்தனையில் என்ன பகுத்தறிவு உள்ளது? என்ன அறிவியல் உள்ளது?

பெரியாரை பகுத்தறிவுத் தந்தையாக ஏற்றுக் கொள்ளும் வீரமணி வகையறாக்களும் மிஹ்ராஜ் பற்றி விமர்சித்த விமர்சகரும் பிள்ளைகள் பெற்றதில்லையா? தங்கள் புதல்விகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவர்களுக்குப் பிள்ளை பிறக்கக் கூடாது என்றுதான் விரும்புவார்களா? பிள்ளை பெற வேண்டாம் என்ற அறிவுரையைத்தான் பிள்ளைகளுக்குக் கூறுவார்களா?

உலகில் உள்ள மூளையுள்ள ஒரு மனிதன்கூட இந்தக் கருத்தை மடமை என்றுதான் கூறுவான். நடைமுறைச் சாத் தியமற்றது என்று எடுத்த எடுப்பிலேயே கூறி விடுவான்.

பெண்களின் உடல் நலனுக்கும் மனித குல நலனுக்கும் இது மிகவும் ஆபத்தானது என்பதை அறிவுடைய ஒவ்வொருவரும் கூறுவார்கள்.

மதங்களில் சொல்லப்பட்டதற்கு அறிவியல் ஆதாரம் கேட்கும் போலி பகுத்தறிவாளர்கள், பெரியாரின் இந்தக் கருத்தை அறிவியல் துணை கொண்டு நிரூபிப்பார்களா?

''பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால் சாதாரணமாய்ப் பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்கிறோம்.

...அதனால்தான் நாம் கண்டிப்பாய்ப் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிறோம்.

எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை வைத்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்வோம்.

பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு, பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல் போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது'' என்றெல்லாம் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலில் பயங்கர ஆராய்ச்சி செய்து பெரியார் கண்டு பிடித்துள்ளார்.

இதனால் ஏற்படும் அழிவையும் அவர் ஒப்புக் கொண்டே இந்த அழிவுக் கொள்கைக்கு மக்களை அழைத்தார். அதே நூலில் அவர் கூறுவதைக் கேளுங்கள்!

''பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது. மானிட வர்க்கம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும். அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத் தால் ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.''.

என்றெல்லாம் உலகத்தை அழித்தொழிக்க அற்புதமான வழியை ஆராய்ந்து கண்டுபிடித்து அதில் கல்லுப் போன்ற உறுதியுடனும் பெரியார் இருந்துள்ளார்.

போலி பகுத்தறிவாளர்கள் தர்ம நியாயத்தின் பக்கம் நின்று பிள்ளை பெறுவது ஏன்? சிலை வணக்கம், சில சடங்குகளை எதிர்த்தார் என்பதைக் கழித்துப் பார்த்தால் அறிவுக்குப் பொருந்தாமல் அதிகம் பேசியவர்கள் பட்டியலில் பெரியார் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்.

பகுத்தறிவுத் தந்தையின்(?) தத்துவங்கள் இன்னும் வரும் இன்ஷா அல்ல்லாஹ்...
- பீ. ஜைனுல் ஆபிதீன்

0 comments: