Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Saturday 6 November, 2010

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்

உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 3
இஸ்லாத்தின் ஆன்மீக நம்பிக் கையில் ஒன்றான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயணத்தின் மீது மிஸ்டர் இனியவன் நடத்திய விமர்சனம் நபிமொழி கலையிலும் அறிவியல் கலையிலும் அவருடைய அறியாமையை வெளிப்படுத்துவ தாகவே அமைந்துள்ளது என்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.
ஆனால் விமர்சகரின் விமர்சனம், விமர்சனத்தோடு மட்டும் நின்றுவிடாமல் நம்மைப் பார்த்து எச்சரிக்கை விடும் அளவிற்குச் சென்றுள் ளது. அவருடைய மிரட்டல்கள் இவ்வாறு போகிறது.

''அறிவியலுக்கு ஜால்ரா அடித்து தங்களின் வேதங்களையும் கடவுள்களையும் காப்பாற்றிக் கொள்ளும் நிலையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் இதுபோன்ற பெரியாரின் பகுத்தறிவுச் சவுக்கடி இன்னும் தொடரும்''

இஸ்லாத்தின் இறை நம்பிக்கை அறி வியலுக்கு எதிரானது அன்று. அது அறிவியல் சார்பானது என நாம் பிரச்சாரம் செய்வதை உடனே நிறுத்திவிட வேண்டுமாம்! இல்லையென்றால் பெரியாரின் சவுக்கை எடுத்து வந்து நம்மை வெளு, வெளு என வெளுத்துக் கட்டுவாராம்!

இவர் இப்போது வெளுத்த இலட்சணத்திலிருந்தே இனி மேலும் இவர் எப்படி வெளுக்கப் போகிறார் என்பதை யூகிக்க முடிகிறது. இவர் இனிமேல் வெளுப்பதாக இருந்தாலும் அது இஸ்லாம் கூறுகின்ற ஆன்மீக மற்றும் மறுமை சம்பந்தப்பட்ட அபவ்தீகச் செய்திகளைக் குறித்ததாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் கூறும் செய்திகள்

இஸ்லாம் என்பது மனித வாழ்க்கையை எவ்வாறு இறை நெறியில் அமைக்க வேண்டும் என்பதைப் பற்றிய கல்வியைப் போதிக்கும் மார்க்கமாகும். எனவே இதன் வழிகாட்டியாகிய திருக் குர்ஆனில் மனித குலத்தின் உலக விவகாரங்களைக் குறித்தும், உலகில் இருந்து மனிதன் விடைபெற்று மறுமைக்குச் செல்ல வேண்டியுள்ளதால் மறுமையின் விவகாரங்கள் குறித்தும் பற்பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன. 

இவற்றுள் மறுமை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகள் அபவ்தீகமானவை, அச்செய்திகளின் அறிவியலை நமது பவ்தீக மூளையால் ஒருபோதும் விளங்கிக் கொள்ள இயலாது. அதே நேரத்தில் திருக்குர்ஆன் கூறுகின்ற உலக விவகாரங்கள் தொடர்பான செய்திகள் நமது பவ்தீக அறிவைச் சார்ந்ததும் அதன் அறிவியல் செய்திகள் நமது மூளையால் விளங்கிக் கொள்ளக்கூடியதுமாகும்.

இஸ்லாம் மார்க்கத்தை யாரேனும் அறிவியல் ஆய்வு செய்ய முன்வந்தால் அந்த ஆய்வு திருக்குர்ஆன் கூறும் உலகியல் செய்திகளைக் குறித்ததாகவே இருக்க வேண்டும். அதைப்போன்று இஸ்லாத்தை அறிவியல் விமர்சனம் செய்யக் கூடியவர்களும் இந்தத் துறையில்தான் விமர்சிக்க வேண்டும். 

அவ்வாறன்றி இஸ்லாம் கூறுகின்ற மறுமையின் செய்திகளையும் மற்றும் மறுமை வெற்றிக்குரிய கல்வியைப் புகட்டுவதற்காக இறைத் தூதர்களுக்கு அளிக்கப்பட்ட அபவ்தீக அற்புதங்கள் போன்றவைகளையும் வெறும் பவ்தீக அறிவியல் அறிவு மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்யக் கூடாது. ஆனால் இவ்வாறு ஆய்வு செய்ய சிலர் முனைந்துள்ளனர்; இச்செயலை கேலிக்கூத்து என்று கூறி பகுத்தறிவாளர்கள் (போலி பகுத்தறிவாளர்கள் அல்ல) எள்ளி நகையாடுவார்கள் என்பதை அத்தகையோர் உணர வேண்டும்.

விமர்சகரின் ஹைலைட் காமெடி

மேற்கண்ட விதத்தில் உள்ள ஒரு கேலிக் கூத்தைத்தான் மிஸ்டர் இனியவன் தமது கட்டுரை வாயிலாக தமிழ் கூறும் நல்லுலகுக்குக் காணிக்கை ஆக்கியுள்ளார். அவர் தமது கட்டுரையில் செய்த மற்றொரு காமெடி, நபிகள் நாயகத்தின் (ஸல்) மிஹ்ராஜ் பயணத்திற்கு பயன்படுத்தியதாக அவர் கூறும் புராக் வாகனத்தைப் பற்றி அவரை விமர்சனம் எழுத வைத்த காரணத்தைக் கூறும் இடத்திலாகும். அவர் கூறும் காரணம் வருமாறு;

''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கற்பனைப்பாத்திரம் அன்று. அவர் ஒரு முன் மாதிரி. அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு. அறிவியல் ரீதியான நிரூபணங்களும் உண்டு. அப்படிபட்ட ஒருவரைக் கற்பனைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுவது மடத்தனம்'' என்று உணர்வு பத்திரிக்கை எழுதி விட்டதாம். இதன் காரணமாகவே புராக்கில் நிரப்பும் எரிபொருளைப் பற்றிய கேள்வியை மிஸ்டர் இனியவன் எழுப்புகிறாராம்!

வெங்காயம்! இதுதான் உமது லாஜிக்

நம்மைப் போன்று இந்த ஸ்தூல (பவ்தீக) உலகில் மனித உடலுடன் உண்மையிலேயே நபிகள் நாயகம் வாழ்ந்தார் என்பதால் அவர் வாழ்ந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பது இயற்கையே. இதைத்தான் உணர்வு கூறியது. ஆனால் இந்தக் கூற்றில் ஆத்திரமடைந்து அதை மறுக்கப் புகுந்த விமர்சகர் தன்னுடைய மறுப்புக்கு மக்கள் மன்றத்தில் விளங்காத ஆதாரங்களை காட்டவே புராக்கைப் பிடித்துவந்து அதனை சித்தரித்து கட்டுரை எழுதினார் என்பது அவருடைய கட்டுரையி­ருந்து தெரியவருகிறது.

என்னய்யா இது வேடிக்கை! முட்டாள் தனத்திற்கு
ஒரு எல்லையே இல்லையா
?

அய்யா! இனியவரே வாதத்திற்காக உம்மை ஒன்று கேட்கிறோம். நீர் நம்ப மறுக்கும் பவ்தீக உலகின் அறிவியலை நீர் எவ்வாறோ கற்று அதை எங்களுக்கும் கற்றுத்தந்து அதன் பிறகு 'புராக்' என்ற ஒரு விலங்கு இல்லவே இல்லையென்று பவ்தீக அறிவியலால் நிரூபித்துக் காட்டுவதில் நீர் வெற்றி பெற்று விட்டதாகவே வைத்துக் கொள்வோம். அப்போதாயினும் அந்த நிரூபணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கற்பனைக் கதாப்பாத்திரமே என்பதற்கும் அப்படி ஒருவர் உலகில் எக்காலத்திலும் வாழவில்லை என்பதற்கும் ஆதாரமாகுமா?

'புராக்' ஒரு கற்பனை விலங்கு என்பதை நீர் நிரூபித்து விட்டால் அப்போதாயினும் 1400 வருடங்களுக்கு முன்னர் அரேபியா நாட்டில் மக்கா நகரில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு ஒரு மகன் பிறந்தார் என்றும் அவரே இஸ்லாத்தைப் பரப்பிய முஹம்மது நபி(ஸல்) என்றும் நம்புவதும் அறிவியலுக்கு எதிரான நம்பிக்கை என்பதற்கு அது ஆதார மாகுமா?

'புராக்' ஒரு கற்பனை வாகனம் என்பதை நீர் நிரூபித்து விட்டால் அப்போதேனும் நபிகள் நாயகத்தை இவ்வுலகில் யாரும் பின்பற்றி வாழவில்லை.நூற்றுக்கணக்கான விஷயங்களில் அவரை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்பவர்கள் இவ்வுலகில் இப்போது இல்லை, இதற்கு முன் இவ்வுலகில் எப்போதும் இருந்தது இல்லை என்பதற்கு அது ஆதாரமாகுமா? என்னதான் கூற வருகிறீர் விமர்சகரே? உம்முடைய விபரக் கேட்டிற்கு ஒர் எல்லையே இல்லையா?

பதிலடி தொடரும்... இன்ஷா அல்லாஹ்...
- ஏ.கே. அப்துர் ரஹ்மான்

0 comments: