Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 5 August, 2010


நாடும் நடப்பும்
அப்படியா சேதி
"இந்த மக்கள் எவ்வளவுதான் சொன்னாலும் திருந்த மாட்டாங்கப்பா... அங்கே பாருங்க!  பஸ்ஸூல எப்படி தொங்கிகிட்டு போறாங்க பாருங்க... என்று பஸ்ஸை சுட்டிக்காட்டிய பாலா

ஆபத்து அறியாத பயணம்

டிரைவருங்க இப்படி ஏறாதீங்கன்னு எத்தனை முறை சொன்னாலும் பசங்க கேட்க மாட்டாங்க... அப்புறம் தவறி கீழே விழுந்து ஏதாவது ஆச்சுன்னா டிரைவருக்கு அடியும் உதையும்தான். இதுக்கு பயந்து அந்த டிரைவர் அடிபட்ட ஆளுக்கு முதலுதவி செய்யவோ, ஆம்புலன்சுக்கு சொல்றதையோ விட்டுட்டு தலைதெறிக்க ஓடி போயிடறாரு...'' என்றார்.

ஆபத்து அறியாத பயணம்

"ஏங்க அப்படி தொங்கக் கூடாதுன்னு பசங்ககிட்ட சொன்னாலும் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் அடி உதைதாங்க... என்ன நீங்க இதெல்லாம் கவனிக்கறதில்லையா...?'' என்று இளைஞர்களின் குறையைக் கூறினார் பீட்டர்.
"ஆனா இந்த மாதிரி சூழ்நிலை நம்ம நாட்டுல மட்டும் தாங்க இருக்கு...'' என்ற பெரியார் பிரியன் "வெளிநாடுகளில் ஏதேனும் விபத்து நடந்தா அவங்களுக்கு முதலுதவி செய்வாங்க... பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவாங்க... ரொம்ப ஆபத்தான சூழ்நிலைன்னா ஆம்புலன்ஸை கூப்பிட்டு மருத்துவமனைக்கு அனுப்பிட்டு டிரைவரும் கூடவே போவாரு. ஆனா நம்ம நாட்டுல டிரைவரு தப்பிச்சோம், பிழைச்சோம்னு ஓடி தப்பிடுவாரு, அல்லது காவல் நிலையத்திற்குப் போய் சரணடைஞ்சுடுவாறு...'' என்றார்.

மிக அருகில் ரயில் வருவது தெரிந்தும் தண்டவாளத்தை கடக்கின்றனர்

"எந்த டிரைவரும் வேணுமின்னே விபத்து ஏற்படுத்தறதில்லைங்க. நம்ம மக்கள்தான் நிறைய தப்பு பண்றாங்க. ரோட்டில் மட்டுமில்லை. தண்டவாளங்களை கடக்கும்போது கூட ரொம்ப உதாசீனமாகவோ அல்லது திமிராகவோத்தான் நடக்கிறாங்க. ரயில் ரொம்ப பக்கத்துல வந்துட்டாலும் கூட பயப்படுறதும் இல்லை, கண்டுக்கறதும் இல்லை. இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வே இல்லை...'' என்று தன் பங்குக்கு சொன்னர் பீட்டர்.

மிக அருகில் ரயில் வருவது தெரிந்தும் தண்டவாளத்தை கடக்கின்றனர்

"அட நான் நேரடியா பார்த்த ஒரு மேட்டரைச் சொல்றேன் கேளுங்க... என்ற பீட்டர், "சில நாட்களுக்கு முன்னால நான் புறநகர் ரயில்ல பயணிச்சப்ப கோடம்பாக்கம் ரயில் நிலையத்துல ரயில் மெதுவா போச்சுங்க... ஏன்ன அங்கே மேம்பாலம் ஒண்ணு கட்டுறாங்க... அப்போ அந்த ரயில் நிலையம் பக்கத்துல ஒருத்தன் தண்டவாளத்தை கடந்தான். நானும் மத்தவங்களும் பாத்துக்கிட்டே இருந்தோம். "டாய் டாய்...''ன்னு ஒரே கூச்சல் குழப்பம். அவன் என்னடான்னா தண்டவாளத்தை கிராஸ் பண்றன்னு அப்படியே தண்டவாளத்தை தாண்டி ஓடுனான் பாருங்க... அவ்வளவுதான் ரயில்ல அடிபட்டு அங்கேயே விழுந்துட்டான். அதைப் பார்த்த எல்லோருக்கும் ரொம்ப வேதனையாப் போச்சு. அப்புறமென்ன ஆள் ஸ்பாட் அவுட்... என்று நேரடி நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார். நண்பர்கள் அந்த நபருக்காக வருத்தப்பட்டனர்.

ஆம்புலன்ஸூக்கு வழிவிடக்கோரி ஒரு விழிப்புணர்வு பேரணி

"எதெதுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு வரைமுறையே இல்லையா? இதெல்லாம் தானா வரணுமுங்க...'' என கடுகடுத்த பாலாவிடம், "ஆமாங்க...'' என துவங்கிய ஃபாரூக், "போன மாசம் மெரீனா பீச்சுல கல்லூரி மாணவிகள் ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தினாங்க. என்னன்னு பார்த்தா ஆம்புலன்ஸூக்கு வழிவிடச் சொல்லி நடந்த பேரணி அது. இதுக்கு கூடவா விழிப்புணர்வு செய்ய வேண்டி இருக்கு என எண்ணிய எனக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு... அப்போதான் எனக்கு அந்த உண்மையும் புரிஞ்சுது... அதாவது, விபத்து ஏற்பட்ட பின் அடுத்து வர்ற சில மணி நேரம் ரொம்ப முக்கியமானது. அதனாலதான் அந்த நேரத்தை கோல்டன் டைம்' அதாவது பொன்னான தருணம் என்று சொல்றாங்க. அந்த நேரத்துக்குள் அவரை மருத்துவமனையில் சேர்த்து  முதலுதவி செய்துவிட்டால் இறைவன் நாடினால் அவரை காப்பாற்றிவிடலாம். அந்த நேரம் தாண்டிட்டா பொழக்க வக்கிறது ரொம்ப கஷ்டம்... இன்னைக்கு நம்ம தமிழத்தில் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் இருந்தாலும் டிராபிக் ஜாம் ஏற்படுறதால விபத்து ஏற்பட்டவங்களை சரியான நேரத்தில் துரிதமா கொண்டு சேர்க்க முடியலை. ஆம்புலன்ஸ் வர்றது தெரிஞ்சும் கூட மக்கள் வழிவிடறதே இல்லை. என்ன ஆனா எனக்கென்னன்னுதான் இருக்கிறாங்க. தான் இப்படி வழிவிடாம நிக்கிறதால ஒரு உயிர் போகப்போகுது என்கிற எண்ணம் அவங்களுக்கு ஏற்படணும் அப்போதான் வழிவிடுவாங்க...'' என்று நிறுத்தி மூச்சு வாங்கினார் ஃபாரூக்.
"எந்த சூழ்நிலையா இருந்தாலும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடணும் என்று சர்வதேச விதிகள் இருக்கு. வழிவிடாதவங்க மீது நடவடிக்கை எடுக்கவும் அவங்க லைசென்ஸையே ரத்து செய்யுமளவிற்கு சட்டத்தில் தண்டனைகளும் இருக்கு. ஆனாலும் ஃபாரூக் சொன்ன மாதிரி மனிதாபிமானமா நடந்தகிட்டாலே அந்த உயிரு பிழைச்சுக்கும்...'' என்றார் பீட்டர்.

வீதியெங்கும் மாயாவதியின் கட்அவுட்டுகள்

"கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவங்களுக்கு நிவாரண நிதி வழங்க பணமில்லை சொன்ன மாயாவதிக்கு 22 கோடி ரூபாய் மதிப்புள்ள பணமாலை விழுந்துச்சாமே! படிச்சீங்களா...?'' என பாலா அடுத்த மேட்டரை கிளற...
"பணம் மட்டுமில்லை. வீதியெங்கும் கட்அவுட்டுகள், நகர் முழுவதும் வண்ண விளக்குகள். அப்பப்பா...'' எனபெரு மூச்சுவிட்ட பீட்டரை பார்த்து, "அங்கே மட்டுமா? இங்கேயும்தான் பணமாலை விழுந்துச்சு. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. வினையை விலை கொடுத்து வாங்காம நல்ல விஷயங்களை பேசுவோம்...'' என்றார் பெரியார் பிரியன்.

22 கோடி ஒரிஜினல் பணத்தில் செய்த மாலை

"பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை நடக்குறதால தேர்வு நேரத்தில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டை தள்ளி வைக்கணும்னு சொன்ன மேட்டரை யாரும் கண்டுக்கவே இல்லையே...?'' என ஃபாரூக் கேட்க,

பகுஜன் சமாஜ் கட்சி வெள்ளிவிழாவிற்கு அலங்கரிக்கப்பட்ட நகர்

"யாரு கண்டுக்கப்போறாங்க... சொல்லிச் சொல்லி பிளஸ் டூ தேர்வும் முடிஞ்சாச்சு. இப்போ டென்த் எக்ஸாம் நடக்குது. மேட்சை முழுசுமா உட்கார்ந்து பார்க்கா விட்டாலும் ஸ்கோர் என்னன்னு அடிக்கடி தெரிஞ்சுக்க ஆசைப்படுவாங்க. படிப்பே ஓடாது. யாருகிட்ட சொல்லி என்ன பிரயோஜனம். இந்த அப்பாவி மக்கள்தான் கிரிக்கெட்டை இந்தியாவின் மானம் காக்கும் ஒரு வீரமாக கருதுறாங்க... விளையாடுறவங்க பணத்துக்காக விளையாடுறாங்க. தோத்தாலும் பணம்; ஜெயிச்சாலும் பணம். எதுல பணம் அதிகமா கிடைக்குமோ அதை செய்வாங்க. சினிமாவில் உடம்பை காட்டி பிழைப்பு நடத்தினவங்க இப்போ கிரிக்கெட் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. ஒவ்வொரு அணியையும் ஒவ்வொரு நடிகை விலைக்கு வாங்கி இருக்காங்க...

கிரிக்கெட்டை ரசிக்கும் ஷில்பா ஷெட்டி

புனே அணி 1700 கோடியாம், கொச்சி அணி 1500 கோடியாம். இப்படி ஒண்ணுக்கு பத்தா சம்பாதிக்க போட்ட திட்டத்துல மாணவர்களோட படிப்பா அவங்களுக்கு முக்கியம்.. பாவம் மக்கள்.. கிரிக்கெட்டை நேசிக்கிறவன் தான் நாட்டுப்பற்றுள்ளவன்னு இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கிறாங்க...'' என்று கிரிக்கெட்டின் அவலத்தைக் கொட்டித் தீர்த்தார் பெரியார் பிரியன்.  படங்கள் :

- மாஹின்
நன்றி : உணர்வு வார இதழ்

0 comments: